Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Felicitations

ஹஜ் பெருநாள் - ஹி.பி. 1424 கி.பி. 2004


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் ஹஜ் பெருநாள்
வாழ்த்துச் செய்தி


எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் உள்ளங்களில் ஊஞ்சலாட, கலப்பற்ற மகிழ்ச்சியுடன் ஹிஜ்ரி 1424 ஹஜ் பெருநாளை சந்தித்திருக்கின்ற சகல முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயபூர்வ ஈத் அல்-அழ்ஹா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.

இறை பாதையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களினதும், அன்னாரின் குடும்பத்தினதும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது ஹஜ் பெருநாள். வீட்டிலிருந்து வெளியேற்றம், அக்கிணிக் குண்டத்தினுள் எறியப்படுதல், விருத்தாப்பிய பருவம் வரை பிள்ளையின்மை, மனைவியையும், மைந்தனையும் பாலைவனத்தில் தன்னந்தனியே விட்டுவிட்டு பிரிய நேரிட்டமை, மகனை அறுத்துப் பலியிட இறை கட்டளை போன்ற சொல்லொனா சோதனைகளை ஏகத்துவப் பாதையில் எதிர்கொண்ட தியாகச் செம்மல் நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் சரிதத்தை முஸ்லிம்கள் தம் மனக்கண் முன்னே நிறுத்திய நிலையில் தான் பிரதி வருடமும் ஹஜ் பெருநாள் மலர்கின்றது. ஆம், அது ஒரு தியாகத் திருநாள். ஓர் உண்மையான இறை விசுவாசி பயணிக்கின்ற பாதை மலர்கள் தூவப்பட்டதாக இருக்காது. மாறாக கற்களும், முற்களும் நிறைந்த கரடுமுரடான பாதையாகவே அது இருக்கும் எனும் தூதையே இப்பெருநாள் ஆண்டு தோறும் சுமந்து வருகின்றது. எத்தனை சோதனைகள் வந்திட்ட போதிலும் அவை அனைத்தையும் பொறுமையுடனும், நெஞ்சுறுதியுடனும் எதிர்கொண்டு அவையனைத்திலும் சித்தியடைந்த நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்வு நம் அனைவருக்கும் இந்நன்னாளில் நமூனாவாக அமையட்டும்.

ஆரம்பம் முதல் இறுதி வரை அசாதாரன சோதனைகளுடன் வாழ்க்கை நடத்திய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) பல்வேறு குணாதிசயங்கள் பெற்றிலங்கினார்கள். விருந்தோம்பலுக்கு இலக்கணமாக வாழ்ந்து ‘விருந்தாளிகளின் தந்தை’ எனும் சிறப்புப் பெயரை பெற்றுக் கொண்ட அன்னாரின் உண்ணத விருந்தோம்பும் பண்பை புனித அல்-குர்ஆன் அழகாக சித்தரித்து சிலாகித்துப் பேசுகின்றது.

துன்பங்களும், துயரங்களும் முஸ்லிம்களின் இல்லங்களில் கூடாரம் அமைத்திருக்கின்ற இவ்வேளை ஹஜ் பெருநாளின் கதாநாயகர் நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் சரிதத்தை அசைபோட்டுப் பார்த்து, அசையாது, ஆட்டம்காணாது நிமிர்ந்து நிற்க திடசங்கற்பம் பூணுவோம். நம் நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் சமாதானம் தலைத்தோங்கி, சகல மக்களும் சகோதர வாஞ்சையுடன் வாழ அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.

பெருநாளைத் தீர்மானிப்பதற்காக சிரமப்பட்டு சிரத்தையுடன் வானில் இளம்பிறையைத் தேடுகின்ற முஸ்லிம்கள் வானில் எங்காவது ஒரு புறத்தில் சமாதான ஒளிக்கீற்று சற்றேனும் பளிச்சிடுகின்றதாவென ஏக்கத்துடன் அன்னார்ந்து பார்க்கின்றனர்.


அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2004.01.30

 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page